"Silence can be the foundation of creativity; whilst the same silence uttered by the audience may splinter the spirit of a creative" - Self :)

Showing posts with label மலரவிழ். Show all posts
Showing posts with label மலரவிழ். Show all posts

Tuesday, June 20, 2023

மலரவிழ் - reviews


Ms. Vatsala - Mar 31 2023

ஹலோ ஹேமா,
இன்று மலரவிழ படித்தேன். வழக்கம்போல் உங்களின் எழுத்து மனதை கவர்ந்தது….விவாகரத்து செய்த இருவேறு கதாபாத்திரங்கள்…சாரா..என்னசொல்ல..இயற்கையை நேசிக்கும் அற்புதமான கதாபாத்திரம்..
அரவிந்தனின் பெயர்காரணம் சொல்லி அவன் தந்தை புலம்பும் இடம்…classic..excellent..நாபா எழுதிய குறிஞ்சிமலரின் அந்த பாத்திரபடைப்பு உங்களின் கை வண்ணத்தில் 60 ஆண்டுகள் கழித்து படிக்கும்போது…it took me to my teenage world.  
வாழ்த்துக்கள் ஹேமா.
அன்புடன் 
வத்ஸலா

Ms. Alamu palaniappan - Mar 22 2023

கதைகளில் இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று கதைகளில் வாழ்வியலைப் பதிவு செய்வது ... இந்தக் கதையும் அவ்வகையே. உங்கள் நாயகனான அரவிந்தன் எப்போதும் போல் மனம் கவர்ந்தான். வாழ்த்துகள் ஹேமா

Ms. Nisha D - Apr 7 2023
Recently I have read Malaravizh novel of yours.That was such a pleasant ending. One of my sister's name is Poorani. That too inspired by Na.Pa's Kurinji Malar. What an extraordinary characterisation of Poorani and Aravindhan in that book. I am really happy that you write about how ppl should be and highlighting their positives. I was recently very fed up by some most unpleasant things some writers had written in their book. This book gave me some good feel now. Thanks to you. Keep up the good work. Wishing you for your future endeavors. Keep writing 😊.
All reactio
Ms. Geetha Ravichandran - Apr 17 2023
இப்போ தான் மலரவிழ் படிச்சு முடிச்சேன். என்ன மாதிரியான ஒரு கதை..... இந்த சமுதாயத்தில் நிறைய ஜேனும் அரவிந்த் ம் இருக்காங்க... எவ்ளோ பேர் அந்த டாக்ஸிக் ல இருந்து வெளியே வராங்கன்னு பார்த்தா, 1% தான் இருப்பாங்க.... இனிமேலாவது இதுல விழிப்புணர்வு வரணும்... காதல் ங்கறது ரெஸ்பெக்ட்.... சத்யமான வார்த்தை....
வாழ்த்துக்கள் ஹேமா..... இந்த மாதிரி யான சமுதாய கதைகள் நீங்கள் நிறைய எழுத வாழ்த்துக்கள்.

Tuesday, April 4, 2023

மலரவிழ் - உங்களுடன் சில வார்த்தைகள்

ஹாய்,

எல்லோரும் எப்படி இருக்கீங்க? நலமா?

ஒவ்வொரு கதை எழுதியபின்பும் அது பற்றி எழுத வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக, மிளிர் மற்றும் மனங்கொத்திப் பறவை எழுதியபோது. அக்கதைகளை எழுதத் தூண்டிய அனுபவங்களைப் பகிர வேண்டும் என்று தோன்றும். பிறகு வாசிப்பவர்களின் எண்ணங்களுக்கு ஊடாக நுழைய வேண்டாம் என்று அமைதியாக இருந்து விடுவது. ஆனால், மலரவிழ் குறித்து ஒரு சில வார்த்தைகளாவது உங்களுடன் பகிர வேண்டும் என்ற உள் மன அழுத்தம் தொடர்ந்து கொண்டே உள்ளது. 

நிறைய நேரங்களில் எழுத்து ஒரு வடிகால். சில கதைக்கருக்களை எழுதும்போது அது படிப்பினையாகவும் அமையும். ‘ஙஞணநமன மெல்லினமாம்!’ எழுதியபின் ஒரு தெரபிக்கு சென்று வந்தது போல உணர்ந்தேன். சில நபர்களிடம் பிரதி அன்பை எதிர்பார்ப்பது நேர விரயம் என்பது அதன்பிறகே என் மனதிலும் அழுத்தமாகப் பதிந்தது. Let go செய்வதை அலுப்புடன் செய்யாமல் புன்னகையுடன் செய்யக் கற்றதும் அப்போது தான். இப்படிச் சில கதைகள் vent என்றால், சில கதாபாத்திரங்கள் நம் மனதுக்குள் புகுந்து வேறெதிலும் நாட்டமில்லாமல் செய்து விடுவார்கள், மலரவிழின் ஜேன், அரவிந்தனைப் போல.

எழுதி மாதங்கள் கடந்தும் இவர்களின் தாக்கம் இன்னும் என் மனதிலிருந்து அகலவில்லை. கதைகளில் தீர்வு கொண்டு வந்து விடலாம். நிஜத்தில்…?? என்ற கேள்வி குடைந்து கொண்டே உள்ளது. இந்தக் கதையும், மனிதர்களும், நிகழ்வுகளும் முற்றிலும் கற்பனை என்றாலும் அரவிந்தனின் சாயல் கொண்ட இளைஞனை நான் அறிவேன். திருமண நேரத்தில் அவன் எவ்வளவு துறுதுறுப்பாகத் தங்கள் கனவில்லம் சமைத்தான் என்றும், பிறகு பேசாமடந்தையாக மாறி விட்டதையும் பார்த்திருக்கிறேன். சொல்லம்புகள் வாங்கிக் கொண்டே புன்னகையுடன் வளைய வரும் ஒரு ஜேனை அரவிந்தனை விட அதிக நெருக்கத்தில் தெரியும். நம் வீடுகளுக்குள் நடக்கும் இத்தகைய குடும்ப வன்முறைகளைப் பற்றி இன்னும் பல நூறு கதைகள் எழுதலாம். அத்தனை நுண் குத்தல்கள் நடக்கிறது உறவுகளுக்குள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது அதில் சிக்கும் குழந்தைகளே. எத்தனை வளர்ந்தாலும்,  வாழ்வில் எவ்வளவு தூரம் சென்றாலும் ஆதியில் ஏற்பட்ட மன பயமும், அழுத்தமும் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

ஒருவிதத்தில் அர்வியின் நிலையிலிருக்கும் ஆண்/பெண்கள் கூட வயதின் அனுகூலத்திலும், இப்போதுள்ள சமூக மாற்றத்திலும் எப்படியோ வெளி வந்து விட முடிகிறது. இன்னொரு நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க முடிகிறது. அஃப்கோர்ஸ் அவர்களின் அத்தனை வலிகளையும் கடந்து தான். ஆனால் ஜேன்கள்? அது அவர்கள் வாழ்க்கை, அவர்களின் முடிவு என்று சாரா போல கையறு நிலையில் நின்று யோசிக்க முயன்றாலும் ஜேன் தொடர்ந்து என் தூக்கங்களைப் பறித்துக் கொண்டே உள்ளார். (இப்போதும் ஒரு vent போலவே இவற்றை எழுதிக் கொண்டிருக்கிறேன் :) குறைந்தபட்சம் வேறு வேலைகளில் மனம் திருப்பலாம் என்று தான் யூ-ட்யூப் சேனல் பற்றி யோசித்ததே. அதுவரை சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆசையோ சிஞ்சித்தும் இல்லை. என் அன்புக்குரிய ஜேனுக்கே அதற்கான நன்றிகள் அனைத்தும் 😊 ) 

கணவன் மனைவிக்கு இடையே மட்டுமல்ல, துரதிர்ஷ்டவசமாகச் சில உறவுகளிலும் நட்புகளிலும் கூட நச்சு முகங்கள் உண்டு. இதற்காக நிறைய வாசித்தேன். பல குடும்ப நீதிமன்ற வழக்குகளைப் பற்றி அறிய முடிந்தது. எழுதுவதற்காக நிகழும் கற்றல் பெறுமதி மட்டுமல்ல. அது தெளிவையும், ஒருவித empowerment-ஐயும் கூடத் தருகிறது. ஏற்கனவே இனங்கண்டிருந்தாலும் போகட்டும் என்று நினைத்திருந்த சில டாக்சிக் நபர்களை இப்போது இன்னும் நுணுக்கத்துடன் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த வகையில் எழுத்து அருமையான learning process. நாவலை முடித்தபிறகும் நீண்ட நெடிய மாதங்கள் எடிட்டிங்கில் சென்றது. மதிப்புக்குரிய ஆளுமைகள் சிலர் வாசித்து அவர்களின் கருத்துக்களை அறிந்தபின் கடைசி நிமிடத்தில் பதிப்புக்கு அனுப்பினேன். 🏃🏃🏃

Say STRICT NO to toxic relationships & zero tolerance for toxicity என்பதே இக்கதையின் ஊடாகச் சொல்ல விரும்பியது. அது சரியாக சென்று சேர்ந்துள்ளதை உங்கள் மறுமொழி வாயிலாக அறியும்போது நிறைவாக உள்ளது. இறைவனுக்கு அடுத்து இப்பயணத்தில் என் முயற்சிகள் ஒவ்வொன்றுக்கும் உறுதுணையாக இருக்கும் வாசகர்களுக்கு என் நன்றிகள் 🙏! புத்தகமாக வந்தவுடன் இளம்தோழி ஒருவர் அனுப்பிய கடிதத்தை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சி!









மலரவிழ் குறித்த அவருடைய பார்வையும், புரிதலும் நிறைவளித்தது என்றால் அவருடைய தோழி எழுதிய ஆங்கில வரிகளின் ஆழமான அர்த்தம் மனதை நெகிழ செய்தது. எழுதுவதின் பயன் இது போன்ற பகிர்தல்கள் இன்றி வேறொன்றுமில்லை. அன்பும் நன்றியும் மனம் நிறைந்த வாழ்த்துகளும் தோழி! இதுவரை வாசித்த உங்கள் அனைவருக்கும் என் அன்பு! கதைகளின் வழியாக ஒருவருடன் ஒருவர் பகிர்ந்து தொடர்ந்து பயணிப்போம் 😊

Wednesday, March 22, 2023

'மலரவிழ்' நாவல் - கிண்டிலில்

டியர் மக்களே,

'மலரவிழ்' நாவல் இப்போது கிண்டிலில்.
Enjoy reading!🙂 Do share a word if you like the heart of the story.💕
புத்தகத்தின் முன்னுரையில் இருந்து -
ஒவ்வொரு மலருக்கும் மலரும் தருணம் என்று ஒன்று உண்டு தானே. சில கதிரவனின் முகம் காட்டலில். சில பளபளவென்று பொழுது புலர்ந்து வரும்போது. சில மாலையின் சுகந்தமான காற்றில். சில நிலவின் தண்மையான பொழிதலில். இவற்றுக்கு விதிவிலக்காக மொட்டவிழும் தருணம் வாய்த்தும் சில மலர்கள் மூடியே கிடப்பதும் உண்டு. அது அவற்றின் குற்றமல்ல. அக செழிப்பையும் தாண்டி சூழலும், புற காரணிகளும் தானே ஒவ்வொரு மலரின் மலர்வையும் தீர்மானிக்கின்றன. அப்படிக் கூம்பி கிடக்கும் சில மலர்களின் விழிப்பையும், இதழ்விரிப்பையும் சொல்லும் கதை தான் “மலரவிழ்”.

மலரவிழ் | Malaravizh (Tamil Edition)
இக்கதையில் உலா வரும் மனிதர்களை நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருப்பீர்கள். ஜேனும் அரவிந்தனும் நாம் அறியாதவர்கள் அல்ல. இவர்களின் வாழ்க்கை இல்லாததை இருப்பதாகச் சித்தரிக்கும் கட்டுக்கதையும் அல்ல. இருவரின் வயதும், சூழலும், பின்புலமும், சிக்கல்களும் வெவ்வேறு தான் எனினும் அவர்களை அருகருகே கொண்டு வந்து நிறுத்தும் பொதுவான புள்ளி ஒன்று உண்டு. குரலற்றவர்களின் குரலாக அவர்களின் ரணத்தையும், அனுபவங்களையும் படிப்பினைகளையும் பகிரும் நோக்கமே இவ்வெழுத்திற்கான வித்து. “மலரவிழ்” குறித்த தங்களின் எண்ணங்களை hemajaywrites@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள். உங்களது ஆதரவுக்கும் மதிப்புமிகு விமர்சனங்களுக்கும் எனது நன்றிகள் பல!🙂💕

Tuesday, January 3, 2023

மலரவிழ் - புதிய நாவல் புத்தக வெளியீடு

 ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! அல்லவை விலக்கி நல்லவை ஈர்க்கும் ஆண்டாக நம் அனைவருக்கும் இவ்வாண்டு சிறக்கட்டும். 🙏

புத்தாண்டு வாழ்த்துகளுடன் ஒரு மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுடன் பகிர வந்துள்ளேன். 2023 ஜனவரி வெளியீடாக எனது புதிய நாவல் ‘மலரவிழ்’ வெளிவந்துள்ளது.